'தேசபந்துவின் பின்னணியில் சஜித்.." : வெளியாகிய புதிய தகவல்


 
பதவியிலிருந்து விலக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடந்த ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட போது, சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகி இருக்கும் நிலையில் அவரும் அதற்கு பொறுப்பக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்ற நிலையில் அது பற்றி தேடிப்பார்க்காமல் பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

எந்த அடிப்படையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார் எனத் தெரியாது. அதேநேரம் தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகும்.

ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி விக்ரம ரத்னவின் பதவியை நீடித்து, அதற்காக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பிரதிநிதியுமே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

அந்தப் பின்னணியிலேயே தேசபந்துவின் வருகை இடம்பெற்றது. அதனால் தேசபந்துவின் நியமனத்னுக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டும்.

மேலும், அரசாங்கத்தின் செல்வாக்கு தற்போது குறைந்து வருகிறது. அரசாங்கத்துக்கும் அது நன்கு தெரியும் என்றார்.